'கிரஹ ஆரோக்யா' திட்டம் மார்ச் முதல் விஸ்தரிப்பு

1

பெங்களூரு: 'கோலாரில் நல்ல முறையில் செயல்படுத்தப்படும் 'கிரஹ ஆரோக்கிய' திட்டம், மார்ச் முதல் மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று அவர் கூறியுள்ளதாவது:

'கிரஹ ஆரோக்கியா' முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டமாகும். சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்வர். அவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் இருந்தால், இலவச சிகிச்சை அளித்து, மருந்துகள் வழங்குவர்.

இதற்கு முன்பு கிராமப்புற மக்கள், மருத்துவ பரிசோதனைக்காக தாலுகா, மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் நீரிழிவு, ரத்த பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தினர். இதை கருத்தில் கொண்டே, இந்த திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

மக்களுக்கு நல்ல மருத்துவ சேவை கிடைக்க செய்வதே, அரசின் நோக்கமாகும். அனைத்து சுகாதார சேவைகளையும், தரம் உயர்த்துவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது.

முதற்கட்டமாக கோலார் மாவட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கு நல்ல முறையில் செயல்படுத்தப்படுவதால், மார்ச் முதல் மாநிலம் முழுதும் விஸ்தரிக்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மக்களின் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளிப்பதன் மூலம், இறப்புகள் எண்ணிக்கையை குறைப்பது, அரசின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement