மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள்: தி.மு.க.,வை எச்சரிக்கிறார் எல்.முருகன்

1

சென்னை: போலி திராவிட மாடல் கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பழனியாண்டவர் கோவில் மலைப்பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்துச் செல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் வரும் 4ம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்கவும், இந்து முன்னணியின் பிரசாரத்தை ஒடுக்கும் விதமாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வழங்குபவர்களை தமிழக போலீசார் கைது செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள், அங்கிருந்த சமணர் வாழ்ந்த படுகைகளில், பச்சை பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத போலீசார், முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. போலீசாரின் இந்து விரோதச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

மிரட்டல்கள் மூலம், ஜனநாயக முறையில் நடைபெறும் திருப்பரங்குன்றம் இந்து மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என எண்ணி, காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். திராவிட மாடல் கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.

Advertisement