மதுபாட்டிலை உடைத்து பெண்கள் போராட்டம்

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், அனுமதியின்றி சில்லரை மது விற்பனை செய்த கடையை பெண்கள் சூறையாடினர்.

பெருமாள்மலை பகுதியில் அனுமதியின்றி கள்ளத்தனமாக சில்லரை மது விற்பனை நடப்பது குறித்து பெண்கள் தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.

எனினும், நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் முதல் இளைஞர்கள் பலரும் மதுவிற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டனர்.

இதனால் பல விதங்களில் பாதித்த பெண்கள் ஒன்று கூடி, சில்லரை மது விற்பனை செய்த கடையிலிருந்த நுாற்றுக்கணக்கான பாட்டில்களை பழனி பெருமாள்மலை பிரிவு ரோட்டில் உடைத்து போராட்டம் செய்தனர்.

தொடர்ந்து, மது விற்றால் மறியலில் ஈடுபடுவோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். மது விற்பனை செய்த பெருமாள்மலையை சேர்ந்த பாண்டி, 51, என்பவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடுகின்றனர்.

Advertisement