எண்ணூர் எண்ணெய் கசிவு: ரூ.73.7 கோடி அபராதம் விதித்ததை சி.பி.சி.எல்., ஏற்க மறுப்பு

சென்னை: எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி., மெட்ராஸ் அறிக்கையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.,) நிராகரித்தது.


கடந்த 2023ம் ஆண்டு பெட்ரோலிய நிறுவனங்களிலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு, சென்னை பக்கிங்கம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது எண்ணூர் பகுதி சுற்று வட்டாரத்திலும் பரவி இருந்தது.


பக்கிங்கம் கால்வாயில் எண்ணெய் கசிவு கலந்திருந்த நிலையில், அதிக மழைப்பொழிவு காரணமாகக் கால்வாய் வழியாகச் சென்ற மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்தது. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது பக்கிங்கம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன. இது குறித்து தேசிய பசுமைத் தீர்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ரூ.73.68 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டு இருந்தது. புயல் வெள்ளம் காரணமாக மணலி பகுதியில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன எனக் கூறி, ரூ. 73.7 கோடி அபராதத்தை சி.பி.சி.எல்., நிராகரித்துள்ளது.



இது குறித்து சி.பி.சி.எல்., நிறுவனம் தரப்பில், 'எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி., மெட்ராஸ் அறிக்கையில் குறை உள்ளது. 517 டன் எண்ணெய் கசிந்துள்ளது என்று ஐஐடி மெட்ராஸ் சமர்ப்பித்த அறிக்கையை நிராகரிக்கிறோம்' என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement