ஆப்பூர் சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

மறைமலைநகர்,வேலுாரில் இருந்து பூந்தமல்லி நோக்கி,'ஈச்சர்' சரக்கு வாகனம், இயந்திரங்கள் ஏற்றிக்கொண்டு ஒரகடம் - ஆப்பூர் சாலை வழியாக, மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலை நோக்கி வந்தது.

சரக்கு வாகனத்தை, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், 32, என்பவர் ஓட்டி வந்தார்.ஆப்பூர் -- மறைமலைநகர் சாலையில் வந்த போது, சாலை வளைவில் எதிரே வேகமாக வந்த கார் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் ஹரிஷ் சரக்கு வாகனத்தை இடதுபக்கம் திருப்பினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஹரிஷின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், 'கிரேன்' இயந்திரத்தின் உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டனர். விபத்து குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement