மாயமான பள்ளி மாணவியரிடம் செங்கை போலீசார் விசாரணை

செங்கல்பட்டுசெங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவியர் இருவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வீட்டிலிருந்து, பள்ளிக்கு சென்றனர்.

ஆனால், மாலை பள்ளி முடிந்தும் வீட்டிற்கு வரவில்லை.

அதிர்ச்சியடைந்த மாணவியரின் பெற்றோர்கள், பள்ளிக்குச் சென்று விசாரித்த போது, மாணவியர் இருவரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்துள்ளது.

இதையடுத்து, மாணவியரின் பெற்றோர்கள் இதுகுறித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார், நேற்று முன்தினம் இரவு முழுதும் மாணவியரை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று காலை, மாணவியர் இருவரும் தானாக, தங்களின் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் இவ்விரு மாணவியரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் செல்லாமல், செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுஉள்ளனர்.

அங்கிருந்து ரயில் வாயிலாக திருச்சிக்கு சென்று, மீண்டும் அதே ரயிலில் திரும்பி வந்ததாக கூறியதாக, போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார், மாணவியரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement