பார்க்கிங் ஏரியாவாக மாறிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை விபத்தில் சிக்கும் கிராமவாசிகள், வாகன ஒட்டிகள்
திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையினை ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் பணி, 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அதில், மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழி பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு சாலை, நசரத்பேட்டை, திருமழிசை, செம்பரம்பாக்கம், பாப்பன்சத்திரம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை உட்பட பல இடங்கள் வாகனங்கள் நிறுத்தமிடமாக மாறி விட்டது.
மேலும், இருவழியாக உள்ள இணைப்பு சாலை பார்க்கிங் ஏரியாவாகி ஒருவழிச்சாலையாக மாறியுள்ளதால், அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகின்றன.
சில இடங்களில் இணைப்பு சாலை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுளளது.
இதனால், வாகன விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள கார் தொழிற்சாலை முன், அதிவிரைவு நெடுஞ்சாலை இணைப்பு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், நெடுஞ்சாலையோரம் உள்ள கிராமவாசிகள் வந்து செல்லும் வகையில் இருவழி இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது குறித்து, காவல்துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இணைப்பு சாலையில் போக்குவரத்து தடை செய்யும் வகையில் தடுப்புகளும் அமைக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.