டில்லியில் பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்


புதுடில்லி: டில்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டில்லி என்.சி.ஆரில் உள்ள நொய்டா ஷிவ நாடார் பள்ளிக்கும், ஆல்கன் பள்ளிக்கும், செயின் ஸ்டீபன் கல்லூரிக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


பின்னர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கும், மூத்த போலீஸ் அதிகாரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்த மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு நொய்டாவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. விசாரணையில், பள்ளிக்கு வர விரும்பாத 9ம் வகுப்பு மாணவன் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

Advertisement