கர்நாடகா முதல்வருக்கு நிம்மதி: நில மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு மறுப்பு

பெங்களூரு: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் நில ஒதுக்கீடு மோசடி வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கர்நாடகா ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.


கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு புறநகர், கெசரே கிராமத்தில் 3.16 ஏக்கர் நிலத்தை, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, அவரது சகோதரர் மல்லிகார்ஜுன் சீதனமாக வழங்கியிருந்தார். இந்த நிலத்தை லே அவுட் அமைப்பதற்காக, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது.



பொதுவாக எந்த பகுதியில், நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதே பகுதியில் அல்லது அதற்கு சமமான வேறு பகுதியில் மாற்று மனை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் பார்வதிக்கு, மைசூரின் பிரபலமான விஜயநகர் லே அவுட்டில் 14 வீட்டு மனைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, மைசூரு லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தார்.


சித்தராமையா, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பெயரில் மனை பெற்றுள்ளதாக, புகாரில் கூறியிருந்தார். லோக் ஆயுக்தாவும் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்க துறையில், சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்பவர் புகார் அளித்திருந்தார்.


அமலாக்க துறையும் விசாரணையில் ஈடுபட்டது. இந்த வழக்கில் சித்தராமையா மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கர்நாடகா ஐகோர்ட் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.


இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ., மாற்றக் கோரி, சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த ரிட் மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இருப்பினும், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டடில் மேல்முறையீடு செய்யப் போவதாக சினேகமயி கிருஷ்ணா கூறினார்.


மதிக்கிறேன்!



'நான் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன், தீர்ப்பை மதிக்கிறேன்," என்று சித்தராமையா தெரிவித்தார். தீர்ப்பு குறித்து, மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறியதாவது: இது அரசாங்கத்திற்கும், முதல்வருக்கும் ஒரு பெரிய நிம்மதி. கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் தொடர்பாக பேச்சு இனி இருக்காது என்று நான் நினைக்கிறேன், என்றார்.

Advertisement