ரெப்போ வட்டி குறைப்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்; வல்லுநர்கள் கருத்து

4

புதுடில்லி: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர்.



வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவுகள் எடுக்கும்.


அதன் படி பிப்.5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. புதிய கவர்னரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தின் கடைசி மற்றும் 3ம் நாளான இன்று (பிப்.7) ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைப்பு குறித்து பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.


இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறியிருப்பதாவது;


ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கம். ரிசர்வ் வங்கியின் இந்த அணுகு முறையானது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் இடையேயான சமநிலையை பிரதிபலிக்கிறது.


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நுகர்வு அதிகரிப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து, உள்நாட்டு தேவையை அதிகரிக்கும். பண பற்றாக்குறையிலிருந்து பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கும்.


இவ்வாறு அவர் கூறினார்.


எம்.கே. குளோபல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் மாதவி அரோரா கூறுகையில்" வட்டி விகித குறைப்பு என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு, இது போன்ற மேலும் சில தொடர்பு நடவடிக்கைகள் வர வாய்ப்புள்ளது" என்றார்.



'கிரிஸில்' நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தர்மாதிகாரி ஜோஷி கூறுகையில், ''டிரம்ப் அரசின் வர்த்தக கொள்கைகள் உலகச்சந்தைகளை ஆட்டிப்படைக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் பணத்தை இப்படித்தான் பயன்படுத்தும். எனினும் எதிர்காலத்தில் வட்டி விகித குறைப்பு என்பது உள்நாட்டு பண வீக்கத்தை பொறுத்தே அமையும்,'' என்றார்.



அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கூறுகையில்," வட்டி விகிதம் குறைப்பு வீடு மற்றும் வணிக கடன்கள் பெறுவோருக்கு நிவாரணமாக அமையும். இது சந்தை பணப்புழக்கத்தை அதிகரித்து, வணிக முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றார்.

Advertisement