மதுரை ஏ.வி., பாலத்தில் போக்குவரத்து 'கட்' புதிய பால பணிக்காக பில்லர்கள் அமைகிறது

தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையும், பாலம் ஸ்டேஷனில் ஒரு பிரிவுமாக மொத்தம் 3 கி.மீ., தொலைவுக்கு ரூ.190 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஏ.வி., பாலத்தையொட்டி மேற்கு பகுதியில்கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைய உள்ளது.

தேவர் சிலை பகுதியில் இருந்து ஏ.வி.பாலம் வழியாக சென்று மீனாட்சி கல்லுாரி அருகே கீழிறங்கி வைகை ஆற்றை கடக்க உள்ளது. இதற்காக வைகை ஆற்றுக்குள் 19 துாண்கள் அமைக்கப்படுகின்றன. ஆற்றின் தென்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டுள்ளன.

ஏ.வி.,பாலத்தில் போக்குவரத்து மாற்றம்



இந்நிலையில் தேவர் சிலை முன்பிருந்து வைகை ஆற்றுக்குள் அமைய உள்ள புதிய பாலம் வரை ஏ.வி., பாலத்தின் மீது 200 மீட்டர் தொலைவுக்கு 7 துாண்கள் புதிதாக அமைக்க வேண்டியுள்ளது. இப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்.

200 மீட்டர் துாரம் வரை போக்குவரத்தை தடுத்து மீனாட்சி கல்லுாரி முன்பிருந்து ஏ.வி., பாலம் மீது ஏறிச் செல்லும் வகையில் 130 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக ரோடு அமைத்து வருகின்றனர்.

கோட்டப் பொறியாளர்மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் ஒரு வாரத்தில் தற்காலிக போக்குவரத்துக்கு தயாராகும் வகையில் பணிகள் நடக்கின்றன.

அதிகாரிகள் கூறுகையில், ''சந்திப்பு பகுதியில் மேம்பாலம் 12 மீ., அகலத்தில் அமைய உள்ளது. இப்பாலத்திற்காக7 துாண்கள் அமைத்து, அதன் மீது மேல்தளம் அமைக்க வேண்டும்.

இதற்காக முட்டுக்கம்புகள் அமைக்கப்படும்போது பாலத்தில் வாகனங்கள் சென்று வர முடியாது. இதனால் இந்த தற்காலிக ரோட்டை அமைத்து வருகிறோம். இப்பணிகள் முடிந்ததும் போலீஸ் அனுமதி பெற்று போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும். ஆறுமாதங்களில் இப்பணி முடிந்து போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பும்'' என்றனர்.

Advertisement