பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தால் இதுதான் கதி; ஆம்ஆத்மி தோல்வி குறித்து ஸ்வாதி மலிவால் கருத்து

8

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு (ஆம்ஆத்மி) கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளதாக ராஜ்சபா எம்.பி., ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.


70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப முதலே பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 48 இடங்களில் முன்னிலையில் உள்ள பா.ஜ., 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் ஆம்ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் ஒரு இடங்களிலும் முன்னிலை பெறவில்லை.


இந்தத் தேர்தலில் பல சுற்று ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டதால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. மேலும், மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


டில்லி சட்டசபை வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மலிவால், ஆம்ஆத்மி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்பு திரவுபதி படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' நாம் வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அதுதான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான் ஆம்ஆத்மிக்கு இருக்கிறது.

குடிநீர், காற்று மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement