டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிக்கு காரணம் என்ன?

17


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் எனக்கூறி வந்த ஆம் ஆத்மிக்கு ஏமாற்றம் கிடைத்தது. அக்கட்சி தோல்வியடைந்து ஆட்சியை பா.ஜ.,விடம் பறி கொடுத்தது. அக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பா.ஜ., இங்கு ஆட்சி அமைக்கிறது.

டில்லியில் பா.ஜ., வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் சில...


நடுத்தர மக்கள் புறக்கணிப்பு






டில்லி மக்கள் தொகையில் 67.16 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் என ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. ஆம் ஆத்மி துவக்கிய காலத்தில், இவர்களே அக்கட்சியின் ஓட்டு வங்கியாக இருந்தனர். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியில் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என ஏழை மக்களை மட்டும் கவனித்தது. நடுத்தர மக்களை கண்டுகொள்ளவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனை கடைசியில் உணர்ந்த கெஜ்ரிவால், சரி செய்ய முயன்றார். ஆனால், அதற்கான அவகாசம் அவருக்கு கிடைக்கவில்லை.
இதற்கு இடையில், பா.ஜ.,வானது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நடுத்தர மக்களின் ஆதரவை பெற்றது. மேலும், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை உயர்த்தி அவர்களை மகிழ்வித்தது.8 வது நிதிக்கமிஷன் அமைப்பு என்ற அறிவிப்பு காரணமாக அரசு ஊழியர்களின் ஆதரவு பா.ஜ.,விற்கு கிடைத்தது.


திட்டங்கள் தொடரும்




ஆம் ஆத்மி ஆட்சியில் வழங்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள், இலவசங்கள் பா.ஜ., நிறுத்திவிடும் என கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரசாரம் செய்தனர். இதனை மறுத்த பா.ஜ., அனைத்து திட்டங்களும் தொடரும் எனக் கூறியது. பிரதமர் மோடியும் இதனை உறுதி செய்தார். இதுவும் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்தது.


மோசமான சூழ்நிலை




டில்லியின் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஆகியன ஆம் ஆத்மியின் செல்வாக்கு சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நிரம்பி வழியும் கழிவு நீர் தொட்டிகள், குண்டு குழியுமான சாலைகள், சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள் ஆகியன வாக்காளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை சரி செய்ய கவர்னர் அனுமதிக்கவில்லை என அக்கட்சி கூறினாலும் மாநிலத்திலும், மாநகராட்சியிலும் அக்கட்சியே அதிகாரத்தில் இருந்ததால், இக்கூற்று மக்களிடம் எடுபடவில்லை.
காற்று மற்றும் குடிநீர் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் உள்ள சிக்கல்களும் ஆம் ஆத்மி மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி உள்ளது.


மாறிய ஓட்டு




டில்லி மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பூர்வாஞ்சலி சமுதாயத்தினர். இவர்களின் ஆதரவை பெறும் வகையில் பீஹாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிக்கு சீட் ஒதுக்கியது. இதனால், அவர்களின் ஆதரவு பா.ஜ.,விற்கு கிடைத்தது.
யமுனை நதியானது, இச்சமுதாய மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆனால், இந்த நதியில் ஹரியானா அரசு நச்சை கலப்பதாக கெஜ்ரிவால் கூறியதும் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கவர்னருடன் மோதல்




கடந்த சில நாட்களாக டில்லி கவர்னர் மற்றும் மாநில அரசு இடையே மோதல் போக்கு நிலவிவந்ததும் மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. மத்தியில் பா.ஜ., ஆட்சி உள்ளதால், டில்லியிலும் அக்கட்சி ஆட்சி அமைந்தால், நிர்வாகம் சுமூகமாக நடக்கும் என மக்கள் நம்பினர். இதற்கு ஏற்றார் போல், இரட்டை இன்ஜீன் அரசு என பா.ஜ., அரசு தீவிர பிரசாரம் செய்தது.


அதிருப்தி




2012ல் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியானது, 2015 முதல் ஆட்சியில் உள்ளது. இதனால், அக்கட்சி மீது சிறிய அதிருப்தி நிலவியது. வேட்பாளர்கள் தேர்விலும் அதிருப்தி ஏற்பட்டது. இதனை கடைசி நேரத்தில் சரி செய்ய முயன்றாலும் பெரிய அளவில் எடுபடவில்லை.



கெஜ்ரிவால் மீதான சர்ச்சைகள்




ஊழலுக்கு எதிரான தலைவர் என கெஜ்ரிவால் தன்னை முன்னிறுத்தினாலும், ஊழல் மதுபான வழக்கில் அவர் கைதானது சிக்கலையே ஏற்படுத்தி உள்ளது. அவர் மட்டுமல்லாமல், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என அவரது கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தங்களை பா.ஜ., அரசு பொய் வழக்கில் கைது செய்கிறது என அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், அது எடுபடவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


காங்.,




லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், சட்டசபை தேர்தலில் இரு கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மேலும், காங்கிரஸ் கட்சியானதுஆம் ஆத்மியை வீழ்த்த வேண்டும் என்ற யுத்தியுடன் பணியாற்றியது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தின் கடைசி நேரத்தில் ராகுலும், பிரியங்காவும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்தனர். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்து வந்தனர். இதுவும் தோல்விக்கு மற்றொரு காரணம் ஆகும்.
ஒரு காலத்தில் டில்லியில் வலுவாக காங்கிரஸ் இருந்த போதும், ஆம் ஆத்மி எழுச்சி காரணமாக அக்கட்சி வீழ்ச்சி அடைந்தது முக்கியமானது.


நிறைவேறாத வாக்குறுதிகள்




2015 மற்றும் 2020 ல் ஒரே வாக்குறுதிகளையும், இலவச திட்டங்களையும் தொடர்ந்து கெஜ்ரிவால் அறிவித்து வந்தார். ஆனால், 2015ல் அறிவிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பைப் மூலம் குடிநீர் மற்றும் டில்லிக்கு மாநில அந்தஸ்து, 20 லட்சம் வேலைவாய்ப்பு ஆகியவை நிறைவேற்றப்படவில்லை. இது போதாது என்று, யமுனை நதி சுத்தம் செய்யப்படவில்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை. சாலைகள் மேம்படுத்தப்படவில்லை என கெஜ்ரிவாலே வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, கெஜ்ரிவால் பொய் வாக்குறுதி அளித்து வருகிறார் என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.


பா.ஜ.,வின் பிரசார உத்தி




கடந்த தேர்தல்களை போல் ஹிந்துத்துவா பற்றி பேசாமல், கெஜ்ரிவாலைபற்றி மட்டும் குறிவைத்து பா.ஜ., பிரசாரம் செய்து வந்தது. அக்கட்சி ஆட்சியில் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் என குற்றம்சாட்டி ஆம் ஆத்மி மீதான மக்களின் நம்பிக்கையை பா.ஜ., தகர்த்தது.


ராகுல் விமர்சனம்




டில்லி சட்டசபை தேர்தலின் போது ஹரியானாவில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார். அவரின் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை எனக்குற்றம்சாட்டினார். மேலும், ஏழைகளின் ஆதரவாளர் என சொல்லிக் கொள்ளும் கெஜ்ரிவால், ஊழல் செய்ததுடன், சொகுசு பங்களாவில் வசிக்கிறார் என பா.ஜ.,வைப் போல் ராகுலும் விமர்சனம் செய்தது ஆம் ஆத்மிக்கு பின்னடைவு ஏற்பட காரணங்களில் ஒன்று.


முக்கிய நிர்வாகிகள் வெளியேற்றம்




ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து வெளியேறினர்.
மூத்த தலைவரான கைலாஷ் கெலாட்டும், ''வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், அரசியல் திட்டங்களில் மட்டும் கட்சி கவனம் செலுத்துகிறது'' எனக்கூறி பதவியை ராஜினாமா செய்தார்.


எதிர்மறை பிரசாரம்




யமுனை நதி மாசுபாடு, டில்லி போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷன் என அடுத்தடுத்து கெஜ்ரிவால் எதிர்மறை பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட்டார். இதுவும் மக்களின் நம்பிக்கையை தகர்க்க காரணமாக அமைந்தது.

Advertisement