பிறவா வரம் அருளும் பேரூர் பட்டீஸ்வரர்

மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூரில் பட்டீஸ்வரர் கோவிலில். சிவபெருமான் பட்டீஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் பிறவாவரம் அருளும் முக்தி ஸ்தலமாகும். கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.

சைவ சமயக்குறவர்களுள் நால்வரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். கரிகாற் சோழனால் இரண்டாம் நுாற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது.

கோவிலில் அருள்பாலிக்கும் பசுவுடன் கூடிய சுயம்பு லிங்கம். தமிழகத்தை ஆண்ட சோழர் மற்றும் நாயக்கர் கால சிற்பக்கலைக்கு சான்றாக இக்கோவிலின் துாண்கள் அமைந்துள்ளன.

முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் கோவிலின் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் கட்டப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், ஹோய்சாள பேரரசர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் இக்கோவிலை மேம்படுத்தியுள்ளனர். பல நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதை பற்றி கோவிலுள்ள கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது.

கோவிலில் கலைநயம் மிக்க அழகுற அமைக்கப்பட்டுள்ள கனகசபை மண்டபம், திருமலைநாயக்கரின் சகோதரர் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கோவில் வளாகத்திலேயே சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமண வைபங்களை நிகழ்த்துவதற்காக கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானம் செப்பனிடப்பட்டது.

சோழர்களின் பூர்வ பட்டயத்தில் பேரூரைப்பற்றிய வரலாறும் அங்கு வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்கள் உள்ளன.

இங்குள்ள சிற்பங்கள் போட்டோக்களை போன்று நம் கண்களால் எளிதாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்து 2025 ஆண்டிலும் கோவில் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது. பச்சைநாயகி அம்பாள் சன்னிதிக்கு வடக்குப்பகுதியில் வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த சன்னிதியில் மட்டும் ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைப்படி வரதராஜபெருமாளுக்கு அன்றாடம் திருவாராதனைகள் நடக்கிறது.

Advertisement