தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!

14

பாட்னா: பீகாரில் வாட்ஸ் அப் செயலி மூலம் பள்ளி மாணவரும், மாணவியும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், போலீசாரும், பெற்றோரும் திணறி வருகின்றனர்.



இணைய உலகம் ஒரு கட்டத்தில் இம்சையான உலகமாக மாறி விட்டதோ என்ற எண்ண தோன்றும் வகையில் அவ்வப்போது ஏதேனும் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் பீகார் மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி, வாட்ஸ் அப் செயலி மூலம் பரஸ்பரம் ஒப்புதல் அளித்து இருவர் திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.


இதுபற்றிய விவரம் வருமாறு;


முசாபர்பூரில் வசிக்கும் பிளஸ் 2 மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் அறிமுகமாகி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை பரிமாறி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் நேசித்ததாக தெரிகிறது. இருவரும் மைனர் என்பதால் அவர்களின் காதலை பெற்றோர் ஏற்க மறுத்தனர்.


இந் நிலையில், வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்றை மாணவிக்கு அந்த மாணவன் அனுப்பி உள்ளார். அதில் Kabool hai (தமிழில் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம்) என 3 முறை டைப் செய்து அனுப்பி இருக்கிறார். பதிலுக்கு எதிர்முனையில் இருந்து மாணவியும் அதே பதிலை அனுப்ப, அவரை மாணவனோ மனைவியாக ஏற்றுக் கொண்டு உள்ளார்.


இந்த டிஜிட்டல் திருமணம் பற்றிய விவரம் அறிந்த பெற்றோர், இந்த kabool hai திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் மாணவனோ அந்த மாணவி தான் தமது மனைவி என்று பிடிவாதமாக இருந்து வருகிறார். அந்த மாணவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவேன் என்று பெற்றோரிடம் அடம் பிடிக்கிறான். மாணவியும், அவன் சொல்வதைக்கேட்டு அப்படியே தலையாட்டி இருக்கிறார்.


டிஜிட்டல் திருமண விவகாரத்தில் தீர்வுகாண இருவரின் பெற்றோரும் போலீசின் உதவியை நாடினர். ஜோடியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்த போலீசார், ஆலோசனை கூறி புரிய வைக்க எவ்வளவோ முயற்சித்தனர்.
ஆனால் அவள் தான் என் மனைவி மாணவனும், அவர் தான் என் கணவன் என்று மாணவியும் உடும்புப்பிடியாக இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் முழித்து வருகின்றனர்.


இருதரப்பு பெற்றோரையும் அழைத்த போலீசார், உரிய புகார் தந்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றனர்.


மொபைல் போன் மூலம் விவாகரத்து செய்து கொண்டதாக இதற்கு முன் பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்போது தான் முதல் முறையாக, மொபைல் போனில் திருமணம் செய்து கொண்டதாக, செய்தி வெளியாகி இருப்பதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement