7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது; அண்ணாமலை கேள்வி
சென்னை; 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கவுரவ விரிவுரையாளர்கள் அனைவருமே, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும், கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர், சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.
நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பு ஊதியம் வெறும் ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாதச் சம்பளமாக வழங்கப்பட வேண்டும். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம், இவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ., சார்பில் தி.மு.க., அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை, ஊதிய உயர்வு வழங்கப்பட வில்லை.
தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. இவர்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதி முறைகளின்படி, உரிய தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டவர்கள்.
பல கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் துறைத் தலைவர்கள் இல்லாததால், அவர்கள் பணிகளையும், கவுரவ விரிவுரையாளர்களே, மேற்கொண்டு வருகின்றனர். பல கல்லூரிகளில், கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவு.
இந்த நிலையில், உரிய தகுதியுடன் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அனைவருக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்கக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பை, உயர் கல்வித்துறை நடைமுறைப்படுத்தாததால், மீண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த 11 வழக்குகளில், 18.10.2024 அன்றும், மேலும் 20 வழக்குகளில், 21.11.2024 அன்றும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம், ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை பின்பற்றித்தான் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என, கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக, உயர்கல்வித் துறை ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படியே, அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர்.
ஆனால், தற்போது, தமிழகத்தில் பணியாற்றக்கூடிய கவுரவ விரிவுரையாளர்கள் எவரையும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கவில்லை என்றும், அதனால், மானியக் குழு பரிந்துரைத்துள்ள மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க இயலாது என்றும், பொய்யான விளக்கத்தை அளித்துள்ளது தி.மு.க., அரசு.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கூட மதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் தி.மு.க., அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்தில் பொய்யான விளக்கம் கொடுத்து, அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை ஏமாற்றியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசுக் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
கவுரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, தி.மு.க., அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?
உடனடியாக, தமிழக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதிய உயர்வு கோரி நியாயமான போராட்டத்தில் ஈடுபடுகின்ற கவுரவ விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் விதமாக, கல்லூரி முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின் படி நியமிக்கப்பட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் எத்தனை பேர், பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியை, தி.மு.க., அரசு எந்த வழிகளில் செலவிடுகிறது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கவுரவ விரிவுரையாளர்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், முதல் மாத ஊதியத்தை, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குத் தாமதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
எனவே, எந்தவித காலதாமதமும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56ன் படி, புதிய விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.