மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., திட்டம்: அமித் ஷா

7

புதுடில்லி: சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இணையப் பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசிக்க, உள்துறை அமைச்சகத்திற்கான பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அமித் ஷா பேசியதாவது:

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசின் சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பிரிவான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4சி) பரிந்துரைகளின் அடிப்படையில் இதுவரை 143,000க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 805 செயலிகள் மற்றும் 3,266 வலைத்தள இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தரவு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி கணக்குகள் பிடிபட்டுள்ளன.
மேலும் ரூ.2,038 கோடி மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன.

மின்னிலக்க முறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொடக்கத்திலேயே முடக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.

அவ்வகையில், ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் 'மியூல்ஹன்டர் ஏஐ' எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அது மோசடிக் கணக்குகளை அடையாளம் காண வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement