அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

11



சென்னை: அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வழக்கு தொடர்ந்தார். அதன்படி இடைக்கால தடை உத்தரவை ஏற்கனவே ஐகோர்ட் பிறப்பித்திருந்தது.


இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கூறி, தேர்தல் கமிஷன் மற்றும் ஓ.பி.ரவிந்தரநாத் ஆகியோர், மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்., 12) தீர்ப்பு அளித்தது.

அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிட அதிகாரம் இல்லை என இ.பி.எஸ்., தரப்பு வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தலாம். சட்டப்படி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறி,
ஏற்கனவே, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.


இந்த தீர்ப்பின் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்.,க்கு தரக்கூடாது என்று வலியுறுத்தி தரப்பட்டுள்ள மனுக்கள் மீது தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் இ.பி.எஸ்.,க்கு கட்சிக்குள் நெருக்கடி உருவாகும்; ஏற்கனவே கட்சிக்குள் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் இ.பி.எஸ்.,க்கு எதிராக பேச தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


அதிகாரம் இல்லை

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை. பதிவு செய்ய வேண்டியது மட்டுமே தேர்தல் கமிஷன் வேலை. இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. அ.தி.மு.க., உறுப்பினர்கள் என்ற போர்வையில் தரப்பட்ட மனு போலியானது.

-சி.வி.சண்முகம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்

Advertisement