அதிகாரத்தில் நீடிக்க மாணவர்கள் மீது அடக்குமுறை: ஷேக் ஹசீனா மீது ஐ.நா., குற்றச்சாட்டு

4


டாக்கா: '' வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக மனிதநேயமற்ற முறையிலான அடக்குமுறைகளை, ஷேக் ஹசீனா அரசு கையாண்டது ,'' என ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்கி உள்ளார். அவரை நாடு கடத்த வேண்டும் என வங்கதேசம் கூறியுள்ளது. இதற்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.


இந்நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை, 45 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 12-13 சதவீதம் பேர் குழந்தைகள் எனக்கூறப்பட்டு உள்ளது. ஆனால், இந்த போராட்டத்தில் 834 பேர் மட்டுமே இறந்ததாக வங்கதேசத்தின் இடைக்கால அரசு கூறியிருந்தது. அதேநேரத்தில் ஐ.நா.,வின் அறிக்கையில், பாலின அடிப்படையில் வன்முறைகள், பாலியல் அச்சுறுத்தல்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள், போலீசார் மற்றும் அவாமி லீக் கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதல் குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மேலும் அந்த அறிக்கையில், '' போராட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் தலைமை மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்தும் மற்றும் வழிகாட்டுதலுடன் நூற்றுக்கணக்கான பேர் நீதிக்குப் புறம்பான கொலைகள், தன்னிச்சையான கைதுகள், தடுப்புக்காவல்கள், மற்றும் சித்ரவதை ஆகியவை நடந்தன என்பதை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன,'' எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisement