மருத்துவமனை ' லிப்ட் ' அறுந்து ஒருவர் பலி

மறைமலைநகர்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ், 36. இவரது நண்பர் பிரசாந்த், 32. இருவரும் 'ஏ.எம்.ஏரோ லிப்ட்' என்ற தனியார் நிறுவனத்தில், 'டெக்னீஷியன்'களாக பணிபுரிந்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை 'சி1 பிளாக்'கில் உள்ள பழைய மின் துாக்கியை அகற்றி, புதிய மின்துாக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நான்காவது மாடியில் இருந்த மின் துாக்கியின் மீது நின்று பணிபுரிந்தனர்.

அப்போது, மின்துாக்கியில் இணைக்கப்பட்டு இருந்த சங்கிலி அறுந்தது. இதில், மின்துாக்கி வேகமாக சென்று, கீழே இருந்த 'ஸ்பிரிங்' மீது மோதி, மீண்டும் ராஜேஷ் மற்றும் பிரசாந்த் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ராஜேஷ், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் உயிரிழந்தார். பிரசாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement