வரும் 21ல் 'வேலை ரெடி' வாய்ப்பை தவற விடாதீங்க!
கோவை; கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, ஒவ்வொரு மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
நடப்பு மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி காலை 10:00 மணி முதல், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரடியாக நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்களது சுய விபரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்கலாம்.
வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு, அப்போதே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
முகாமில் பணிநியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 0422 - 2642388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மனுதாரர்கள் அதிகளவில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.