சிவகாசியில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினார்.

சிவகாசி நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் திருமலை குமார் 37. இவரது மனைவி ராஜலட்சுமி 27. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. எட்டு வயதில் மகள் உள்ளார். திருமலை குமார் கோயம்புத்துாரில் அச்சகத்தில் வேலை பார்த்த நிலையில் இரு வாரத்திற்கு ஒருமுறை சிவகாசிக்கு வந்து செல்வார். சமீபத்தில் விடுமுறைக்கு சிவகாசி வந்திருந்தார்.

அப்போது அவரது மனைவி அடிக்கடி அலைபேசியில் பேசியதால் சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் திருமலை குமார் நேற்று காலை 11:45 மணியளவில் ராஜலட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சரணடைய வந்தவர் கைது



திருமலைகுமார் நேற்று மாலை 4:40 மணிக்கு சாத்துார் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார்.

நீதிமன்ற காவல் பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது மனைவியை கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக கூறியுள்ளார்.

சுதாரித்த போலீசார் அவரை கைது செய்தனர்.


வீட்டில் சத்தம் கேட்கிறது



திருமலை குமார் தனது மனைவியை கொலை செய்த பின்னர், கட்டைப் பையில் பொருட்களுடன் வீட்டை விட்டு வெளியேறி நடந்து செல்லும் வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் திருமலை குமாரை ஒருவர் வழிமறித்து உங்கள் வீட்டில் சத்தம் கேட்கிறது என கூறுகிறார். அதற்கு அவர் ஒன்றும் தெரியவில்லை நான் ஊருக்கு கிளம்புகிறேன் என கூறி நடக்கிறார். தொடர்ந்து இங்கே வாருங்கள் எனக் கூப்பிட்டும் கண்டு கொள்ளாமல் ஊருக்கு செல்கிறேன் என நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

Advertisement