சொத்துவரி செலுத்தாத வீட்டின் படிக்கட்டு உடைப்பு மாநகராட்சி ஊழியர்கள் உச்சக்கட்ட 'கெடுபிடி' வசூல்

கடலுார்: கடலுாரில் சொத்துவரி செலுத்தாத காரணத்தால் வீட்டின் படிக்கட்டை உடைத்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்களின் செயல்பாடுகளினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலுார் மாநகராட்சியில் கடைகள் வாடகை பாக்கி, சொத்து வரி பாக்கி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியை முழுமையாக செலுத்த முடியாமல் பொது மக்கள், வியாபாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில் சொத்துவரியை நிலுவையில்லாமல் செலுத்துமாறு மாநகராட்சி ஊழியர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதனால் வரி செலுத்தாதமல் நிலுவையிலுள்ள ஒரு சில வீட்டு உரிமையாளர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் வாய்க்கு வந்தபடி திட்டுவது, சீல் வைப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வருகை தர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாநகராட்சி இவ்வளவு 'கெடுபுடி' வசூல் செய்வதை ஒத்தி போடலாமே என தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறினார். நேற்று செந்தாமரை நகர் விரிவாக்கம் பகுதியில் வீட்டுவரி உள்ளதை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் சிமென்டாலான படிக்கட்டை கடப்பாறையால் உடைத்தனர். இதை பார்த்த அக்கம்பக்கம் குடியிருக்கும் பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement