பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என, மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் தலைவர் ராமதாஸ் அறிக்கை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் டிசம்பர் 1998ம் ஆண்டு புதுச்சேரி அரசால் நிறுவப்பட்டது. இந்த ஆணையம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். இதுவரை ஆணையம் ஆறு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆறாவது ஆணையத்தின் காலம் 30.5.2018 முடிவடைந்தது. அதையடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக புதிய அணையத்தை நியமிக்கவில்லை.

ஆணையம் செயல்படாமல் இருப்பதால் மக்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல், தங்களுடைய சமூகப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

காரைக்காலில் மீனவர் பிரிவிலிருந்து தங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, கோரி ஐகோர்ட் அணுகியபோது, நீதிபதிகள் மனுதாரரை புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வழிகாட்டியது.

இந்த ஆணையத்தை அமைக்காததால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். எனவே முதல்வர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி ஆணையத்தை இன்னும் 15 நாட்களுக்குள் மறுசீரமைத்து செயல்பட வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement