மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி 

கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, போதிய பஸ் வசதியின்மையால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். பஸ் நிலையத்தில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களில் சென்று ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு செல்கின்றனர். பெரும்பாலோனர் நடந்து செல்கின்றனர்.நேரடி பஸ் வசதியின்மையால் மருத்துவமனைக்கும் செல்லும் நோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்கச் செல்லும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.விழுப்புரத்தில் நகரில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் செல்லக்கூடிய பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதேபோன்று கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு மினி பஸ்கள் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement