ஹிந்துக்களை தாக்கவில்லை: வங்கதேசம் புதுக்கதை

12

புதுடில்லி: 'வங்கதேசத்தில், ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக கூறுவது மிகைப்படுத்தப்பட்ட செய்தி' என, அந்நாட்டு எல்லை காவல் படை தளபதி கூறினார்.


நம் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லைக் காவல் படை, நம் எல்லைப் பாதுகாப்பு படை இடையே, இயக்குநர் ஜெனரல் மட்டத்திலான 55வது ஒருங்கிணைப்பு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.


கூட்டத்தில், நம் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, வங்க தேச எல்லைக் காவல் படை இயக்குனர் ஜெனரல் முகமது அஷ்ரப் உஸ்மான் சித்திக் பங்கேற்றனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது, வங்கதேச தளபதி சித்திக் கூறியதாவது: இந்தியர்களையோ, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரையோ வங்க தேச எல்லைக் காவல் படையினர் ஒருபோதும் தாக்கியதில்லை. கடந்த சில மாதங்களாக வங்க தேசத்தில் ஹிந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடப்பதாக வெளியாகும் செய்திகள், மிகைப்படுத்தப்பட்டவை. சிறுபான்மை ஹிந்துக்கள் மீது, அது போன்ற தாக்குதல்கள் நடக்கவே இல்லை.


மீடியாக்களும், அரசியல்வாதிகளும், குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதிகள்தான் தவறான தகவல்களை கூறி வருகின்றனர். வங்கதேசத்தில் வாழும் ஹிந்துக்கள், அவர்களின் பண்டிகைகளை சுதந்திரமாக கொண்டாடுகின்றனர். எல்லையில் துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு, எல்லைக் காவல் படையினர் முழு பாதுகாப்பு அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement