கள்ளச்சாராய வழக்கில் பறிமுதல் செய்த பொருட்கள் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் பறிமுதல் செய்த பொருட்களை சி.பி.ஐ., போலீசார் எடுத்து சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி கள்ளச்சாராயம் குறித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து 24 பேரை கைது செய்தனர். அவர்களில் 18 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், குண்டர் சட்ட உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து வழங்கவில்லை எனக்கூறி, 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி மனு அளித்தனர். இதில், சூ.பாலப்பட்டு கண்ணன், 40; வாணியந்தல் அய்யாசாமி, 45; ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பலரும் ஜாமின் கோரி, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. அதனையொட்டி, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சி.பி.ஐ., மனு தாக்கல் செய்ததால், அனைத்து ஜாமின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், கள்ளச்சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மெத்தனால் கலந்த சாராயம், சாராய மாதிரி முடிவுகள் உள்ளிட்ட பொருட்கள், ஆவணங்களை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.

அதன்பேரில் இவ்வழக்கில் பறிமுதல் செய்த அனைத்து பொருட்களும் நாளை மறுநாள் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Advertisement