பனை மரத்தில் சிவப்பு ஒளிர்வான் பொருத்த வேண்டுகோள்

கேளம்பாக்கம்,வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான வழித்தடத்தில், சாலையோரம் உள்ள பனை மரங்களில் சிவப்பு ஒளிர்வான் பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான 20 கி.மீ., சாலையில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், போக்குவரத்திற்கு ஏற்ப சாலையின் அகலம் இல்லை.

தவிர, பல இடங்களில் சாலையின் அகலம் விரிந்தும், சுருங்கியும் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில், சாலை ஓரம் உள்ள 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள், பட்டுப்போன பனை மரங்கள், வாகன ஓட்டிகளை விபத்து அச்சத்திற்கு ஆளாக்குகின்றன.

இதனால், இவற்றில் சிவப்பு ஒளிர்வான் பொருத்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இரவு நேரத்தில், போதிய வெளிச்சமின்றி பயணிப்பதால், பனை மரங்களின் மீது வாகனங்கள் மோதி, பெரும் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. தவிர, பட்டுப்போன பனை மரங்கள் காற்றில் சாய்ந்து, கீழே விழுந்து, விபத்து நிகழவும் வாய்ப்புள்ளது.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு புலப்படும் விதமாக பகலிலும், இரவிலும் மின்னக்கூடிய சிவப்பு ஒளிர்வான்களை பனை மரங்களில் பொருத்தவும், பட்டுப்போன மரங்களை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement