ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

2



ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, தி.மு.க.,வில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க., - எம்.பி.,க்கள் சண்முகம், வில்சன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., சந்திரசேகரன் ஆகிய, ஆறு எம்.பி.,க்களின் பதவிக் காலம், வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது. அப்பதவிகளுக்கு, ஜூன் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.


இதில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் உறுதியாக கிடைக்கும். அதில், ஒரு எம்.பி., பதவி, ம.நீ,ம., கட்சி தலைவர் கமலுக்கு வழங்கப்பட உள்ளது.


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உடல் நலம் கருதியும், லோக்சபாவில் அவரது மகன் துரை எம்.பி.,யாக இருப்பதாலும், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி தர வாய்ப்பில்லை என, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தற்போதைய எம்.பி.,க்கள் அப்துல்லா, சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவதால், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



மற்றொரு எம்.பி., வில்சன், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் நடத்தப்படும் வழக்குகளில் ஆஜராகி வருவதால், அவரது பதவி நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இவரை தவிர, மீதமுள்ள மூன்று எம்.பி., பதவிகளை பெற, ஆளும் தி.மு.க.,வில் கடும் போட்டி காணப்படுகிறது. வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயங்களைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, அச்சமுதாய நிர்வாகிகள் சிலர், தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும், இளைஞர் அணி, மகளிரணி, மருத்துவ அணி நிர்வாகிகளும் அப்பதவியை பெற விரும்புகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர், எம்.பி., பதவி கேட்டு துணை முதல்வர் உதயநிதியிடம் கடிதம் கொடுத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.




- நமது நிருபர் -

Advertisement