இரவு பணியை குறைக்கக்கோரி ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்

சென்னை:'தொடர் இரவு பணிகளை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் ஓட்டுநர்கள், சென்னை சென்ட்ரலில், 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் ஓட்டுநர்களுக்கு, எட்டு மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும்; தொடர் இரவு பணியை தவிர்க்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கம்' சார்பில், ரயில் ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் முதல், 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, ஈரோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மொத்தம், 800க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன், தென்மண்டல இணை செயலர் பார்த்தசாரதி ஆகியோர் கூறியதாவது:

ரயில் ஓட்டுநர்கள், தற்போது 12 மணி நேரத்துக்கும் மேலாக பணிபுரிகின்றனர். நான்கு தொடர் இரவு பணிகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஓட்டுநர்கள் சோர்ந்து போகின்றனர். போதிய ஓய்வின்றி அவதிப்படுகின்றனர். மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

எனவே, ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும்; இரவு பணிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, 36 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம்.

எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் அளித்துள்ளோம். பயணியரின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் நலனை கருத்தில் வைத்து, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement