தி.மு.க., - பா.ஜ., இடையே வேறுபாடில்லை: சீமான்

சென்னை: 'வக்பு வாரிய நிலங்களை அபகரிப்பதில், தி.மு.க., - பா.ஜ., இடையே வேறுபாடில்லை' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:



திருச்சி மாநகரம் தென்னுார் மீர் ஹசனுல்லா ஷா தர்காவுக்கு சொந்தமான 45,252 சதுர அடி நிலம், அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்துடன் சேர்ந்து, பூங்கா, மனமகிழ் மன்றம் உள்ளிட்டவை அமைக்க, திருச்சி மாநகராட்சியால் அபகரிக்கப்பட்டுள்ளது.



அபகரிக்கப்பட்ட நிலம், தர்காவுக்கு சொந்தமானது என, தமிழ்நாடு வக்பு வாரியம் உறுதி செய்ததும், அங்கு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


மத்திய பா.ஜ., அரசு, வக்பு வாரிய நிலங்களை தன்வயப்படுத்த, வக்பு வாரிய திருத்தம் சட்டம் கொண்டு வருவதற்கு, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.


அவரது ஆட்சியில், திருச்சியில் வக்பு வாரிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?

வக்பு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில், பா.ஜ.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது; இதுதான், இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement