பராமரிப்பில்லாமல் வீணாகும் வாயலுார் - கடலுார் பாலாற்று பாலம்

புதுப்பட்டினம், வாயலுார் - கடலுார் பாலாற்றுப்படுகை பழைய பாலத்தை, உள்ளூர் போக்குவரத்து, நடைபயிற்சி ஆகியவற்றுக்காக பராமரிக்க, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதி பாலாற்றின் குறுக்கில் கடக்கிறது.

ஆற்றை கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன், தரைமட்ட குறுகிய பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்திற்கு பயன்பட்டது. தற்கால போக்குவரத்திற்கேற்ப இல்லாததால், அதையொட்டி நான்குவழி உயர்மட்ட பாலம், கடந்த 2016ல் கட்டப்பட்டு, வாகனங்கள் கடக்கின்றன.

இதையடுத்து, பழைய பாலம் கைவிடப்பட்டது. விவசாயிகள், அறுவடை காலத்தில் பாலத்தில் நெல் உலர்த்துகின்றனர். பெரும்பாலும் குடிமகன்கள் பாலத்தில் முகாமிட்டு மது அருந்தி, குப்பை குவிக்கின்றனர்.

புதிய பாலத்தில் இருசக்கர வாகன பயணியர், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

விபத்தை தவிர்க்க, 1 கி.மீ., நீள பழைய பாலத்தை, அதன் உறுதிதன்மையை பரிசோதித்து, உறுதியாக இருந்தால் பராமரித்து, இருசக்கர வாகன போக்குவரத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்.

பாலத்தின் அருகில், தடுப்பணை அமைக்கப்பட்டு, நீர்தேக்கம் ரசித்தவாறே, நடைபயிற்சிக்கு பயன்படுத்தலாம். இங்கிருந்து 3 கி.மீ.,ல், அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம் உள்ளதால், அப்பகுதியினர் நடைபயிற்சி செல்ல ஆர்வம் காட்டுவர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை பரிசீலிக்க, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement