மோகன்லால், மாதவன், மனு பாகர்...; பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர்!

6


புதுடில்லி: உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 10 பேரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.


நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது தான். உடல் பருமன், பல வகையான நோய்களை, பிரச்னைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில், 10 சதவீதத்தை குறையுங்கள்.


அதுபோல, உணவுக்கான எண்ணெய் வாங்கும்போதே, 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு படிப்படியாக இதை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எண்ணெயை குறைக்கும் அதே நேரத்தில், 10 பேரிடமும் இது போன்ற சவாலை முன்வையுங்கள். இதனால், உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும், இவ்வாறு அவர் பேசினார்.


இந்த நிலையில், உடல் பருமனுக்கு எதிரான பிரசாரம் செய்யவும், எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 10 பேரின் பெயரை தேர்வு செய்துள்ளார்.


தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, போஜ்புரி நடிகர் நிராஹுவா ஹிந்துஸ்தானி, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், தொழிலதிபர் நந்தன் நிலேகனி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பாடகி ஸ்ரேயா கோஷல், ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆகியோரின் பெயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.


இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தான் தேர்வு செய்தவர்களும் தலா 10 பேருக்கு இந்த சவாலை விடுக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement