இமாச்சலில் தொடரும் இடைவிடாத பனிப்பொழிவு! தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

தரம்சாலா; கடும் பனிப்பொழிவு காரணமாக, இமாச்சல பிரதேசத்தில் 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.



இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு காலநிலை மாறி உள்ளது. கடும் பனிப்பொழிவு, மழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.


பனிப்பொழிவு எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பிரதான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


சம்பா, கங்கரா, குலு, மண்டி ஆகிய மாவட்டங்களில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. குல்லு மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.


பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவுறுத்தி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது;


தற்போதுள்ள நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன். நிர்வாகம் தரப்பில் விடுக்கப்படும் அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆறுகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement