பகுஜன் சமாஜில் அதிரடி மாற்றம்: மருமகனை நீக்கினார் மாயாவதி

3

புதுடில்லி: பகுஜன் சமாஜில் அதிரடி மாற்றமாக, பகுஜன் சமாஜின் தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி,கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை நீக்கிவிட்டார்.

ஆகாஷ் ஆனந்தின் தந்தை ஆனந்த் குமார் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ராம்ஜி கவுதம் ஆகியோர் புதிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

டிசம்பர் 10, 2023 அன்று மாயாவதி ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து,லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, கட்சித் தலைவர் மாயாவதி மீண்டும் ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.



மே 7, 2024 அன்று, அத்தகைய முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு முதிர்ச்சியின் அவசியத்தைக் காரணம் காட்டி, 28 வயதான அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் தற்போது அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டார்.

மாயாவதியின் உடன் பிறந்த சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் தான் இந்த ஆகாஷ் ஆனந்த். லண்டனில் படித்து பட்டம் பெற்றவர்.


அவர், அசோக் சித்தார்த்தின் மகள் பிரக்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். தனது மருமகன் இருக்கும் தைரியத்தில் அசோக் சித்தார்த், கட்சியில் பிளவுகளை உண்டாக்கி விட்டதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.


இதன் காரணமாக, ஆகாஷ் ஆனந்த், அவரது மாமனார் அசோக் சித்தார்த் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து மாயாவதி நீக்கியுள்ளார்.

அதே வேளையில், தன் சகோதரர் ஆனந்த் குமார் மீது எந்த நடவடிக்கையும் மாயாவதி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement