ராமஜென்ம பூமியில் காலணிகளை விட்டுச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் இதுதான்!

31

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான காலணிகள் ஏன் தேங்குகிறது என்பதற்கான காரணங்களை கோவில் அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.



உ.பி.யில் அயோத்தியில் 2024ம் ஆண்டு ஜன.22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் ராமஜென்ம பூமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் ஒரு மாதம் கடந்தும், ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களால் அயோத்தி நகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய பிரச்னையை சந்தித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.


இதனால் எங்கு பார்த்தாலும் காலணிகளாகவே ராமர் கோவில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் காட்சி அளிக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன என்று அதிகாரிகள் தரப்பில் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.



இதுகுறித்து அதிகாரிகள் கூறுவதாவது;


ராமல் கோவிலின் முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை விடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் பின்னர் கோவிலை சுற்றி பார்த்து தரிசனம் முடித்த பிறகு, அரைகிலோ மீட்டர் நடந்து சுற்றுப்பாதையை முடிக்கின்றனர். பின்னர், மீண்டும் தங்கள் காலணிகளை சேகரிக்க அதே முதல் நுழைவு வாயிலுக்கு வருகின்றனர்.


கூட்டம் அதிகரித்து வரும் தருணத்தில் பக்தர்களை 3வது நுழைவுவாயில் வழியாக வெளியேறும்படி கோவில் ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். பக்தர்கள் அப்படியே செல்வதால் முதல் நுழைவுவாயிலில் அவர்கள் விட்டுச் சென்ற காலணிகளை சேகரிக்க முடியாமல் போகிறது.


5 முதல் 6 கி.மீ. வரை சுற்றி வந்து காலணிகளை எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் காலணிகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதுவே லட்சக்கணக்கான காலணிகள் தேங்க காரணம்.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


அதே நேரத்தில் ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், 'எதிர்பாராத தருணங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. எவ்வித குழப்பங்களும் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கடந்த 30 நாட்களாக பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன' என்றார்.

Advertisement