கச்சத்தீவு பிரச்னை: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

4

சென்னை: '' அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். கவர்னர் அவரோடு போட்டியிட வேண்டாம் ,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் சென்ற தமிழக கவர்னர் ரவி, இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவர், தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, 1974ம் ஆண்டு நடந்த தவறும், அதற்கு அப்போதைய மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த இன்றைய ஆளும் கட்சியும் தான் காரணம் என தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் கவர்னர் ரவி. துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதல்வர், கடிதம் வாயிலாக வலியுறுத்தியும், திமுக கூட்டணி எம்.பி.,ககள் பார்லிமென்டில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் பா.ஜ., அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிய பாஜ அரசின் இயலாமையை மறைக்க கவர்னர் ரவி தமிழக அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார்.

கச்சத்தீவு தொடர்பாகக் வீண் அவதூறு பரப்பும் விஷமிகளுக்குக்கு முதல்வரும், கட்சி நிர்வாகிகளும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டனர். இருந்தாலும் எத்தனை விளக்கம் கூறினாலும் விளங்காத கவர்னர் ரவிக்கு மீண்டும் சொல்கிறேன். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய முதல்வர் கருணாநிதி தான். அதோடு பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியது திமுக. அதுமட்டுமல்லாது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அப்போதைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும் ஆனால் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் கவர்னர் ரவிக்கு இதெல்லாம் தெரியாதுதான்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கச்சத்தீவு பற்றி ஒரு ஆர்டிஐ ஆவணம் வெளியாகி உள்ளதாகச் சொல்லி புரளியைக் கிளப்பி குறளி வித்தை காட்டினார் அண்ணாமலை. அதனைப் பிரதமர் மோடி முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் வரை உண்மையாக்க முயன்றார்கள். கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜ கூட்டணி தோற்றுப் போனது.

புஸ்வாணம் ஆன விவகாரத்தை இப்போது கவர்னர் ரவி தூக்கிக் கொண்டு வந்து கலர் மத்தாப்பு காட்ட முயல்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்கள் முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது. தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன.

எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப மத்திய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் கவர்னர் ரவி.

கடந்த லோக்சபாத் தேர்தலில், 'அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி அரசு மீட்கும்” என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்? தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள். லோக்சபா தேர்தலில் மக்கள் கொடுத்த அடி கவர்னருக்கு நினைவு இருக்கிறதா? அப்படியான பதிலடியைத் தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். கவர்னர் அவரோடு போட்டியிட வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் ரகுபதி கூறியுள்ளார்.

Advertisement