புல்லட் ஸ்பெஷலிஸ்ட் திருடர்கள் கைது; 8 புல்லட் பறிமுதல்!

4

திண்டுக்கல்:புல்லட் திருடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்ற கரூரை சேர்ந்த வாலிபர்கள் இருவரை, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 புல்லட் உட்பட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் புல்லட் டூவீலர் திருடுபோவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. எஸ்.பி., பிரதீப் உத்தரவில் நகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,வீரபாண்டி தலைமையிலான போலீசார் நகர் முழுவதும் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அதில் 2 வாலிபர்கள் புல்லட் டூவீலர்களை மட்டும் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வாலிபர்கள் பயன்படுத்திய அலைபேசி எண்களை வைத்து போலீசார் பின் தொடர்ந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ராயனுாரை சேர்ந்த ஹரிஹரன் 23, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பிரசாந்த், 25 என்பதும் தெரிந்தது.

போலீசார் இன்று கரூர் சென்று இருவரையும் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 8 புல்லட் உட்பட 10 டூவிலர்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டூவீலர் திருட்டு வழக்குகள் இருப்பதும் இருவரும் புல்லட் டூவீலர்களை மட்டும் குறிவைத்து திருடுவதும் விசாரணையில் தெரிந்தது.

Advertisement