சுங்கச்சாவடியில் கட்டண விலக்குத.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்


சுங்கச்சாவடியில் கட்டண விலக்குத.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்



பாலக்கோடு:பாலக்கோடு அருகே உள்ள, சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, த.வெ.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கர்த்தாரஹள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டணத்தில் விலக்கு அளிக்கக்கோரி, த.வெ.க., பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் விக்னேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயராணி முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா பேசுகையில், ''அதியமான்கோட்டை - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,844) பணிகள் முழுமையாக முடிக்கவில்லை. மேலும், அங்கு பயணிகளுக்கான கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த, 20 அன்று முதல், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கர்த்தாரஹள்ளி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை பணி தொடங்கியபோது, பாலக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது, மீறப்பட்டுள்ளது. எனவே, பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து, த.வெ.க.,வினர் சுங்கசாவடியை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சுப்ரமணியம், வீரம்மாள் மற்றும் போலீசார், த.வெ.க.,வை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என, 21 பெண்கள் உட்பட, 196 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement