சரியான நேரத்துக்கு இயக்கப்படாத அரசு பஸ்போக்குவரத்து மேலாளருக்கு மக்கள் கடிதம்


சரியான நேரத்துக்கு இயக்கப்படாத அரசு பஸ்போக்குவரத்து மேலாளருக்கு மக்கள் கடிதம்


பவானி,:வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள வட்டக்காடு கிராமத்துக்கு, சரியான நேரத்துக்கு அரசு பஸ் இயக்கப்படாததால், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர், ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வட்டக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் வேலைக்காக வெளியூர் சென்று திரும்புகின்றனர். எங்களுக்கு வசதியாக, பி-23 அரசு டவுன் பஸ், வட்டக்காடு-பவானி வழித்தடத்தில் இயங்கியது. கொரோனா தொற்றுக்குப்பின், சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. குறிப்பாக அதிகாலை, 5:30 மணி ட்ரிப் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு, 6:35 மற்றும் 9:05 மணிக்கு பவானி பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்க வேண்டும். ஆனால், 20 நிமிடத்துக்கு முன்னதாக பஸ் கிளம்பி விடுகிறது.இந்த மாற்றங்களால் பவானியிலிருந்து அந்தியூர் மற்றும் வட்டக்காடு வரை பயணிப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், டூவீலர்களில் அந்தியூர் சென்று, பஸ் பிடிக்க வேண்டியுள்ளது. எனவே பழையபடி அதிகாலை நேரத்திலும், பவானி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், சரியான நேரத்துக்கு பஸ்ஸை இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement