பிளஸ் 2வில் எந்த பிரிவு படித்திருந்தாலும் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம்: 'கியூட்' தேர்வுக்கு பின் வாழ்க்கை பிரகாசமே

'கியூட்' நுழைவுத்தேர்வு விண்ணப்பப் பதிவு துவங்கிய நிலையில், பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடத்தில் படித்தாலும் உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம் என, தமிழ்நாடு மத்திய பல்கலை அறிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வரும், 2025--2026ம் கல்வியாண்டுக்கான இளநிலை கியூட் நுழைவுத் தேர்வு, மே 8 முதல் ஜூன் 1 வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு, தற்போது துவங்கிஉள்ளது.

தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக, மார்ச் 22க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த, மார்ச் 23 கடைசி நாள்.

தொடர்ந்து விண்ணப்பங்களில், 24, 25, 26 தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கியூட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட, 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே நடப்பாண்டு கியூட் நுழைவுத் தேர்வு விதிமுறைகளில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடம் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்தில் தேர்வு எழுதலாம். அதேபோல, ஒருவர் அதிகபட்சம், 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை இணையதளத்தில் அறியலாம்.



- நமது நிருபர் -

Advertisement