சி.ஐ.எஸ்.எப்., தின கொண்டாட்டம்; 'சைக்கிளத்தான்' பேரணி 7ல் துவக்கம்

சென்னை; மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., உருவான தினத்தை முன்னிட்டு, 'கோஸ்டல் சைக்கிளத்தான்' என்ற விழிப்புணர்வு பேரணி, வரும் 7ம் தேதி துவங்குகிறது.

இதில், 125 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 6,553 கிலோ மீட்டர் துாரம், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கடந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில், 29ம் தேதி பேரணியை நிறைவு செய்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜாதித்ய சோழன் ஆர்.டி.சி., மையத்தில், 7ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேரணியை துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து, சி.ஐ.எஸ்.எப்., தென்மண்டல ஐ.ஜி., சரவணன் கூறியதாவது:

'சுரக் ஷித தட், சம்ருத் பாரத்' எனப்படும், 'பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா' என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த சைக்கிளத்தான், ஒரு விளையாட்டு நிகழ்வாக மட்டுமின்றி, தேச பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

இந்தியாவின் கடற்பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே, இதன் முக்கிய நோக்கம்.

வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேரணி நடக்கிறது.

கூடுதல் விபரங்கள் மற்றும் பங்கேற்பு விபரங்களை, www.cisfcyclothon.com என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement