தி.மு.க.,வினர் சுயநலத்துக்காக கள்ளுக்கு தடை: பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

உடுமலை : “மதுபான ஆலைகள் நடத்தும் தி.மு.க., பிரமுகர்கள் நலனுக்காக, 'கள்' இறக்க தமிழக அரசு தடை விதித்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது,” என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கொங்கல்நகரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், கள் விடுதலை கருத்தரங்கம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநிலத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.

நல்ல விலை



கருத்தரங்கில் பங்கேற்ற பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தென்னை விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு வரியை அதிகரித்ததால், தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனால், தி.மு.க., அரசு விவசாயிகளின் எந்த பிரச்னையையும் கண்டுகொள்வதில்லை.

தென்னை, பனை மரங்களில் இருந்து பெறப்படும் கள், போதைப்பொருள் அல்ல; உணவுப்பொருள் என பலமுறை தெளிவுபடுத்தியும், விவசாயிகள் கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது.

கள் இறக்க அனுமதி கொடுத்தால், தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நடத்தும் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

அதிக வருவாய்



'டாஸ்மாக்' மது விற்பனையால், அரசுக்கு நேரடியாக கிடைக்கும் வருவாயைவிட, தி.மு.க.,வினருக்கு மறைமுகமாக அதிக வருவாய் கிடைக்கிறது.

தென்னை, பனை விவசாயிகள் கோரிக்கை குறித்து பா.ஜ., ஆய்வுசெய்து, விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, 'தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவது, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றால் அரசுக்கு, ஆண்டுக்கு 1 லட்சத்து 10,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்' என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்தால், கள் மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement