கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைக்கும் பிரச்னைக்கு தீர்வாகுமா: விழாவிற்கு முன் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்

கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்கும் பிரச்னைக்கு விழா துவங்குவதற்கு முன் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இதனால் கோயில் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை தொல்லியல் துறை சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும் என தமிழக பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா நடைபெறும். இவ்விழாவிற்கு தமிழக கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இக் கோயிலுக்குச் செல்ல குமுளியிலிருந்து கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., தூரம் ஜீப் பாதை உள்ளது. இது தவிர தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரத்தில் நடைபாதை உள்ளது.

ஏராளமான பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் கேரள வனப் பகுதி வழியை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு இரு மாநில கலெக்டர் தலைமையான ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்படி விழா கொண்டாடப்படும். இதனால் கேரள வனப்பகுதி வழியாக செல்லும்போது கேரள வனத்துறையின் கெடுபிடி அதிகமாக இருக்கும். இதனால் தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் செல்லும் வகையில் ரோடு அமைக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே இது குறித்து தமிழக வனப் பகுதியில் பலமுறை சர்வே செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த ஆண்டு விழா துவங்குவதற்கு முன் ரோடு அமைப்பதற்கான அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகம் உள்ளது.

Advertisement