எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு நிகில் குமாரசாமி கிண்டல்

பெங்களூரு: 'கிரஹலட்சுமி திட்ட பயனாளிகளுக்கு பணம் இல்லை; ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் குட்டி துாக்கம் போட, ஆர்டர் செய்த உடன் சாய்வு நாற்காலிகள் மட்டும் வந்துவிட்டன' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர், நேற்று முன்தினம் துவங்கியது. விதான் சவுதாவின் சட்டசபை வளாகத்தில், உணவு இடைவேளைக்கு பின், எம்.எல்.ஏ.,க்கள் 'குட்டி துாக்கம்' போட, 15 சாய்வு ஷோபாக்கள் வாங்கப்பட்டுள்ளன. சபாநாயகர் காதரின் இந்த முடிவு, தற்போது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசு, புதிய திட்டங்களுக்கு நிதி வழங்குவதில்லை. கிரஹலட்சுமி திட்டத்தின் பயனாளிகளுக்கு முறையாக நிதி வழங்கப்படுவதில்லை. ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் குட்டி துாக்கம் போட, சொகுசு சாய்வு ஷோபாக்களுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில், 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

காங்கிரஸ் அரசின் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும், குடும்ப தலைவிக்கு 2,000 ரூபாய் வழங்கும் தொகை, ஐந்து மாதங்களாக தாமதமாக வருகிறது. அன்னபாக்யா பணம் கூட, மக்களை சென்றடையவில்லை.

ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் ஆடம்பரமாக, சாய்வு நாற்காலியை பெற்றுள்ளனர். ஆர்டர் கொடுத்தவுடன் சாய்வு நாற்காலி வந்துவிட்டது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement