மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; தமிழிசைக்கு போலீசார் அனுமதி

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரண்டு மணி வாக்குவாதத்திற்கு பிறகு போலீசார் அனுமதி அளித்தனர்.
நிகழ்ச்சியில், இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க, 'புதிய கல்வி' என்ற இணையதளத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 06) சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார்.
அப்போது போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதி பெறாமல் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இரண்டு மணி வாக்குவாதத்திற்கு பிறகு போலீசார் அனுமதி அளித்தனர்.
முன்னதாக, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போது தமிழிசை கூறியதாவது: சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை, என்றார்.
அண்ணாமலை கண்டனம்
அவரது அறிக்கை: ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ., சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் கவர்னர் தமிழிசையை போலீசார் கைது செய்துள்ளார்.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க.,வின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. தி.மு.க.,வின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும், இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.,வினர் பயந்து பின்வாங்கப் போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதல்வர் அவர்களே?
தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.










மேலும்
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு
-
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
-
ரவுடி படப்பை குணா கைது
-
செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா
-
தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா
-
மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்; திடீர் பரபரப்பு!