குண்டாறு பாலத்தில் உடைந்த பக்கவாட்டு சுவர்

காரியாபட்டி : தோணுகால் குண்டாற்றின் குறுக்கே மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள பாலத்தில் பக்கவாட்டு சுவர் வாகனம் மோதி உடைந்துள்ளது. சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.

காரியாபட்டி தோணுகால் அருகே மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் குண்டாற்றின் குறுக்கே மதுரை செல்லும் வழியில் பழமையான பாலம் உள்ளது. அப்பகுதி வளைவாக இருக்கும். ஒரு மாதத்திற்கு முன் அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கியது. பக்கவாட்டு சுவர் சேதமடைந்தது.

ஏற்கனவே பக்கவாட்டுச் சுவர் கம்பிகள் துருப்பிடித்து உடைந்த நிலையில் இருந்தது. இதற்கு முன் ஒரு வாகனம் மோதியதில் பக்கவாட்டு சுவர் இடிந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் சிமென்ட் செங்கல் வைத்து பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. மறுபடியும் பக்கவாட்டுச் சுவர் உடைந்து, திறந்த வெளியாக இருப்பதால் ஆபத்தான நிலை உள்ளது.

டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் ஆற்றுக்குள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். விபத்திற்கு முன் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement