போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் பெங்களூருவில் கைது

1

பந்தலூர்:கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு, போதை பொருள் சப்ளை செய்யும் தலைவனை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில், போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் அவ்வப்போது போதை பொருள் கடத்தி வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் கடந்த 24ம் தேதி பெங்களூரில் இருந்து வயநாடு பகுதிக்கு வந்த செமீர் என்பவரிடமிருந்து, எம்.டி.எம்.ஏ. போதைப் பொருளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவன் கொடுத்த தகவலின் படி பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில், படித்து வரும் தான்சானியா நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ் சாம்சன், 24, என்பவனை இன்று பத்தாம் தேதி வயநாடு டி.எஸ்.பி., அப்துல் செரீப், இன்ஸ்பெக்டர் ராகவன், எஸ்.ஐ., அதுல்மோன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பெங்களூர் சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களில் இவரின் வங்கி கணக்கில், 80 லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.


மேலும் இவன் எந்தெந்த பகுதிகளுக்கு போதை பொருட்கள், சப்ளை செய்துள்ளான் என்பது குறித்தும், இவனின் வாடிக்கையாளர்கள் குறித்தும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணை மேற்கொண்டால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இதில் சிக்க கூடும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும், முழு பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் பதிவெண் மற்றும் டிரைவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது..

Advertisement