ஊராட்சி செயலாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்

அன்னூர், : 'கோரிக்கையை வலியுறுத்தி, நாளை (12ம் தேதி) ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும்' என, ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை :

முறையான கால முறை சம்பளம் பெற்று வரும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசு சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும்.

இதை வலியுறுத்தி, நாளை ( 12ம் தேதி) கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வரும் ஏப். 4ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில், 10 ஆயிரம் ஊராட்சி செயலர்கள் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement