பெதப்பம்பட்டி வழியாக கூடுதல் பஸ் கிடப்பில் போடப்பட்டது கோரிக்கை

உடுமலை : பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக உடுமலைக்கு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.


பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக, உடுமலை செல்லும் வழித்தடத்தில், பூசாரிபட்டி, ஏ.நாகூர், புதுப்பாளையம், ராவணாபுரம், கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.


இப்பகுதியை சேர்ந்த மக்கள், உடுமலையிலுள்ள தாலுகா அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களுக்கும், மாணவர்கள் அரசு கலைக்கல்லுாரி, ஐ.டி.ஐ., வர போதிய பஸ் வசதி இல்லாததால், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி-பெதப்பம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் ஏறி பெதப்பம்பட்டியில் இறங்கி, அங்கிருந்து உடுமலைக்கு மற்றொரு பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாது, உடுமலை அரசு கலைக்கல்லுாரி உட்பட கல்லுாரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், இரண்டு பஸ்கள் மாறி பயணிக்க வேண்டியுள்ளதால், வேதனைக்குள்ளாகின்றனர்.


பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி வழியாக உடுமலைக்கு பஸ் இயக்கினால், ஏரிப்பட்டி, மரம்புடுங்கிகவுண்டனுார், சுந்தரகவுண்டனுார், பூசாரிபட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.


குறிப்பாக, மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement